கடந்த 2017-செப். 15-ந் தேதி அதிகாலை திருச்சி அரியமங்கலம் ஜீவானந்தம் தெருவை சேர்ந்த செந்தில்குமார்(45). இவரது மனைவி உமாமகேஸ்வரி (38).
இருவரும் கோவையில் சிகிச்சைக்கு செல்வதற்காக தங்களது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு திருச்சி-தஞ்சை மெயின் ரோட்டில் அரியமங்கலம் எஸ்.ஐ.டி.கல்லூரி அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பஸ்சுக்காக காத்திருந்தனர்.
அப்போது கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலையை சேர்ந்த நாகராஜூ(38) ஓட்டிவந்த டிப்பர் லாரி எவ்வித சைகையும் காட்டாமல் ரோட்டின் வலதுபுறம் திரும்ப, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையைச்சேர்ந்த புஷ்பராஜ் (43) ஓட்டிவந்த கார் மீது மோதியது.
லாரி மோதிய வேகத்தில் கார் இடதுபுறமாக சென்று அங்கு பஸ்சுக்காக காத்திருந்த செந்தில்குமார், அவரது மனைவி உமாமகேஸ்வரி ஆகியோர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தனர்.
இந்த விபத்து குறித்து பொன்மலை குற்றப்பிரிவு போலீசார், டிப்பர் லாரி டிரைவர் நாகராஜூ, கார் டிரைவர் புஷ்பராஜ் ஆகியோர் மீதான வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி சாந்தி முன்பு நடந்து வந்தது. இறுதி விசாரணை நேற்று நடந்தது.
அதில், விபத்து ஏற்படுத்தி 2 உயிர்கள் பலியானதற்கு காரணமான நாகராஜூ, புஷ்பராஜ் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1000 அபராதம் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது.