லால்குடி அருகே திருமண மண்டப உரிமையாளர் வீட்டில் 159 பவுன் நகை, ரூ.12 லட்சம் மற்றும் 20 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி,நெருஞ்சலகுடி வெள்ளாளர் தெருவை சேர்ந்த திருமண மண்டப உரிமையாளர் ஏகாம்பரம். இவர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் இவரது மனைவி கமலம் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு திருச்சியில் உள்ள இளைய மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு மார்ச் 3-ந்தேதி இரவு 10 மணி அளவில் கமலம் என்ற மாலதி நெருஞ்சலகுடிக்கு வந்துள்ளார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றவருக்கு அதிர்ச்சி. பீரோ மற்றும் இரும்பு பெட்டி திறக்கப்பட்டு அறையில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.
இதுகுறித்து அவர் லால்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பீரோவில் வைத்திருந்த 20 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் இரும்பு பெட்டியில் வைத்து இருந்த 159 பவுன் நகைகள், ரூ.12 லட்சம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.