நவம்பர் 30 சர் ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்த நாள்:

நவம்பர் 30 சர் ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்த நாள்:
சர் ஜெகதீஸ் சந்திர போஸ் என்னும் இந்தியர் மார்க்கோனி ரேடியோவை கண்டுபிடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே பொதுமக்கள் முன்னிலையில் ரேடியோ அலைவரிசையை வெற்றிகரமாக சோதித்து காட்டியவர். அது மட்டுமின்றி இவர் பல துறைகளில் நிபுணராக இருந்தார், உயிரியல், இயற்பியல், தாவரவியல், தொல்பொருள் ஆராய்ச்சி என பலதுறைகளிலும் பல சாதனைகளை படைத்தவர்.
பிறப்பும் படிப்பும்

ஜெகதீஷ் சந்திர போஸ் 1858 ஆம் ஆண்டு வங்காளத்தில் பகவான் சந்திர போஸ் என்பவருக்கு மகனாக பிறந்தார். இவர் முதலில் தாய்மொழியை போதிக்கும் பள்ளியில்தான் சேர்க்கப்பட்டார். ஏனெனில் தாய்மொழி கல்விதான் மற்ற திறமைகளை வளர்த்துக்கொள்ள அடிப்படை என அவர் தந்தை கூறுவார் என பின்னாளில் ஒரு கூட்டத்தில் கூறினார். இப்போதிருக்கும் பெற்றோர் பலருக்கும் இது புரிவதில்லை. பின்னர் யுனிவர்சிட்டி ஆப் கல்கத்தாவில் இளநிலை பட்டம் பெற்ற இவர் யுனிவர்சிட்டி ஆப் லண்டன்-க்கு மருத்துவம் படிக்கச் சென்றார். ஆனால் மோசமான உடல்நிலை காரணமாக அதனை தொடர முடியாமல் போனது. பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து பல பட்டங்களை பெற்றார் ஜெகதீஸ் சந்திர போஸ்.

1885ல் இந்தியா திரும்பிய ஜெகதீஸ் சந்திர போஸ் அப்போது இந்திய ஆளுநராக இருந்த ரிப்பன் பிரபுவின் பொருளாதார ஆலோசகரான ஆல்பிரட் கிராப்ட் என்பவரின் பரிந்துரையில் கல்கத்தா ப்ரெசிடெண்சி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். ஆனால் அப்போதிருந்த நிறவெறி கொள்கை காரணமாக போஸ் கடுமையாக வஞ்சிக்கப்பட்டார். அப்போதிருந்த பேராசிரியர்களுக்கு மாதம் 300 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது, ஆனால் இந்திய பேராசியர்களுக்கு 200 ரூபாய்தான் வழங்கப்படும், அதிலும் போஸ் அவர்களுக்கு 100 ரூபாய் மட்டுமே அந்த கல்லூரியின் முதல்வர் சி.ஹெச். டவ்னி அவர்களால் வழங்கப்பட்டது. இந்த நிறவெறி கொள்கையை எதிர்த்து போஸ் இரண்டு வருடம் சம்பளமே வாங்காமல் வேலைக்கு சென்றார். இதுபோன்ற எதிர்ப்பை எதிர்பார்க்காத சி.ஹெச். டவ்னி வேறுவழியின்றி போஸ் அவர்களை நிரந்தர பேராசிரியராக பணியமர்த்தினார்.

சம்பளம் மட்டுமின்றி ஆங்கிலேயர்களின் நிறவெறி கொள்கையால் பலவழிகளில் பாதிக்கப்ட்டார் போஸ். இடைவெளி இல்லாத பணிச்சுமை, கல்லூரி சோதனைக்கூடத்திற்குள் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே அவர் தனது சிறிய அறையையே தனது சோதனைக்கூடமாக மாற்றிக்கொண்டு தனது ஆராய்ச்சிகளை தொடர்ந்தார். பேராசிரியராக பணிபுரியும்போதுதான் அவருக்கு ஆங்கில இயற்பியல் வல்லுநர் ஆலிவர் லாட்ஜ் எழுதிய புத்தகத்தை படித்து ரேடியோ அலைகளின் மீது ஆர்வம் ஏற்பட்டது. பின்னர் தன் கடின முயற்சி மூலமும், ஆர்வம் மூலமும் ரேடியோ அலைகளை கொண்டு தகவல் அனுப்புவதை வெற்றிகரமாக கண்டறிந்தார் போஸ்.
1895 ஆம் ஆண்டு கல்கத்தா டவுன்ஹாலில் தன் கண்டுபிடிப்பை சோதனை செய்து காட்ட முடிவெடுத்தார் போஸ். அதுமட்டுமின்றி பெங்காலியில் எழுதப்பட்ட அதிர்ஷ்ய அலோக் (அதாவது கண்ணுக்கு தெரியாத ஒளி என்று பொருள்) சுவர்களை கடந்து தகவலை அனுப்பும் என்ற குறிப்புடன் வந்தார். மேலும் தன் சோதனையை வெற்றிகரமாக முடித்தும் காட்டினார். இவரின் இந்த கண்டுபிடிப்பு லண்டனில் பிரபலமாய் இருந்த எலக்ட்ரீசியன் என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது.
போஸ் செய்த தவறு சோதனை வெற்றியடைந்த பின் போஸ் தான் கண்டுபிடித்த மெர்குரி கருவியை முழுமையாக்குவதில் கவனம் செலுத்தினார் . ஆனால் அதற்கு அவருக்கு சரியான பொருளாதார வசதிகள் கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி அவர் அதன் கண்டுபிடிக்கு காப்புரிமை வாங்குவதில் கவனம் செலுத்தவில்லை.
மார்க்கோனி ரேடியோ அலைகளை பயன்படுத்தி செய்திகளை இருபுறமும் பகிர செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். எனவே அவர் காப்புரிமை இல்லாத போஸ் அவர்களின் கண்டுபிடிப்பு குறிப்புகளை பயன்படுத்திக்கொண்டார். போஸ் அவர்கள் ரேடியோ அலைகள் பற்றிய ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டினாரே தவிர அதனை வியாபாரமாக்குவதில் அக்கறை செலுத்தவில்லை. ஆனால் மார்க்கோனி தன்னுடைய கருவிக்கு விரைவில் காப்புரிமை வாங்கிவிட்டார். ஆனால் இவருக்கு இரண்டு ஆண்டுக்கு முன்பே ஜெகதீஷ் சந்திர போஸ் ரேடியோ அலைகளை கண்டுபிடித்து உலகறிய செய்தார்.
போஸ் அவர்களுக்கு அவரின் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என்றாலும் பின்னாளில் உலகம் அவரை கொண்டாடியது. IEEE எனப்படும் சர்வதேச எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அமைப்பு ஜெகதீஷ் சந்திர போஸை தகவல் தொழில்நுட்பத்தின் தந்தையாக அறிவித்தது. ஏனெனில் இவரின் கண்டுபிடிப்பில் சிறிய மாற்றத்தை மட்டும் செய்துதான் மார்க்கோனி நோபல் பரிசை வென்றார். இந்தியாவின் சிறந்த அறிவியல் மேதை, வங்காளத்தின் அறிவியல் பிதாமகர் மேலும் பல சிறப்பு விருதுகளை பெற்றார். கல்கத்தாவில் போஸ் இன்ஸ்டிட்யூட் என்று ஒரு கல்விநிறுவனம் தொடங்கப்பட்டு இவரின் ஆராய்ச்சிகளும், இவர் உபயோகப்படுத்திய கருவிகளும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தனது திறமையால் அறிவியல் உலகத்தில் அசைக்க முடியாத இடத்தை பெற்ற சர் ஜெகதீஷ் சந்திர போஸ் 1937 ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாள் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவரின் புகைப்படத்தை இந்திய அரசாங்கம் தபால் தலையில் வெளியிட்டு கௌரவப்படுத்தியுள்ளது. வரலாற்றில் நவம்பர் 30 சர் ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்த நாள் குறித்து திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்
