
திருச்சியில் பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் மோசடி:
விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் தமிழகத்தில் ரூ.110 கோடி மோசடி நடந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் என்ற போர்வையில் தகுதியற்ற நபர்கள் போலியாக இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்அடைந்து உள்ளனர். இந்த விசாரணை முடிவில் சுமார் 32 கோடி ரூபாய் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 5 1/2 லட்சம பயனாளிகள் சந்தேகத்திற்கு இடமாக இருப்பதாகவும் அவர்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் வேளாண்மை துறை முதன்மை செயலாளர் சுகன் தீப் சிங் பேடி அளித்த பேட்டியில் கூறினார். திருச்சி மாவட்டத்திலும் இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் படி திருச்சி மாவட்டத்தில் இந்த திட்டத்தில் பயன் அடைந்த சுமார் 15 ஆயிரம் பயனாளிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களது வங்கி கணக்குகளை முடக்கி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
