திருச்சி பஸ் நிலையம் அருகில் காலணி சீர்படுத்தும் பரமசிவத்துடன் ஒரு நேர்காணல்

சாமானியர்கள் முதல் சாதனையாளர்கள் வரை நாம் பதிவு செய்து கொண்டிருக்கிறோம் இல்லையா? அந்த வரிசையில் இன்று வில்லியம்ஸ் சாலையில் பஸ் நிலையம் மிக அருகில் நாம் எல்லோரும் அன்றாடம் கடந்து செல்லும் செருப்பு தைக்கும் தொழிலாளி பரமசிவத்துடன் ஒரு நேர்காணல்
ஐயா தங்களது பெயர்?
பரமசிவம்.

எத்தனை வருடங்களாக இங்கு கடை வைத்துள்ளீர்கள்.
40 வருடங்கள்.
உங்களது பூர்வீகம்?
திண்டுக்கல், அய்யம்பாளையம்.
என்னவெல்லாம் செய்வீர்கள்?
செருப்பு தைப்பேன், சூ செய்வேன், பாலிஷ் போடுவேன், குடை ரிப்பேர் செய்வேன்.
தினமும் உங்களுக்கு கிடைக்கும் வருமானம்?
300 ரூபாய் வரும்.
மக்கட்செல்வங்கள் எத்தனை?
3 குழந்தைகள்.
என்ன செய்கிறார்கள்?
வீட்டு வேலை செய்கிறார்கள்.
எத்தனை மணிக்கு இங்கு வந்து கடை போடுவீர்கள்?
காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை.
உங்களுக்கு வேறு தொழில் தெரியாதா?
இது எங்களது குலத்தொழில்.
அரசு ஏதேனும் உங்களுக்கு உதவி செய்துள்ளதா?
அரசு எங்களுக்கு கடன் கொடுத்துள்ளது.
சூபாலிஷ்க்கு எவ்வளவு சார்ஜ் செய்வீர்கள்?
பாலிஷ்க்கு 40 ரூபாயும், சூ தைப்பதற்கு ரூ.120 வாங்குவேன்.
எந்த நூலில் தைப்பீர்கள்?
டொயின் நூலால் தைப்பேன். சூ முழுவதும் தைத்து மீண்டும் பிய்ந்து போகாமல் இருக்கும்படி செய்து தருவேன். ஏனெனில் ஆயிரம் ரூபாய் கொடுத்து வாடிக்கையாளர்கள் வாங்கும் சூ நீண்ட நாள் உழைக்க வேண்டாமா? அதனால்த்தான் ரூ.120 சார்ஜ் செய்கிறேன்.
கேட்கும் தொகையை உங்களது வாடிக்கையாளர் தருகின்றனரா?
சிலபேர் கேட்ட கூலி கொடுப்பர். சிலபேர் குறைத்து கொடுப்பர். வாங்கிக்கொள்வேன். பிளாட்பார்மில் உட்கார்ந்து கொண்டு பேரம் பேசுவது தவறில்லையா?
அரசாங்கம் ஏதாவது செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
ஆம். பஸ்ஸ்டாண்ட் ஓரம் ஒரு கடை வைத்துக்கொடுத்தால் நன்றாக இருக்கும். அதற்கு பெயர் பங்க் (சிறிய கடை) வைத்துக்கொடுத்தால் நன்றி உள்ளவர்களாக இருப்போம் என்கிறார் அவர். மரத்திலேயே பெட்டி போன்ற ஒர் அமைப்பு. இனி வரும் வெயில் காலத்தில் சாலையோரத்தில் இருப்பது சற்றே கடினமான செயல்தான்.
வெளிறிய முகம். இளைத்த தேகம் கண்கள் இரண்டும் குழி விழுந்த நிலையில் இருக்கும் இவரின் மூலதனம் என்னவெனில் ஒரு பை, நான்கைந்து செருப்புகள். ஒரு பெட்டி, குத்தூசி, ஆணி அடிப்பதற்கு ஒரு கருவி வைத்துள்ளார். சாலை ஓரம் தூசி, மாசடைந்த காற்று, இவற்றிற்கிடையே ஒரு சிறிய சாக்குப்பையை விரித்து உட்கார்ந்து கொண்டு, தினமும் கிடைக்கும் ரூ.300-ல் தனது குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்து மனநிறைவுடன் வாழும், செருப்பு மற்றும் குடை தைக்கும் பரமசிவம்.
வெற்றிச்செல்வன்
