திருச்சியில் மூதாட்டியிடம் தாலிசெயின் பறிப்பு

திருச்சி காஜாமலை பகுதி டி.வி.எஸ்.நகரை சேர்ந்த தண்டபாணியின் மனைவி தனலட்சுமி , இவர் நேற்று முன்தினம் இரவு அண்ணா விளையாட்டரங்கம் அருகே உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் எதிரே வந்த மர்மநபர் ஒருவர், திடீரென தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலிச்சங்கிலியை பறித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

இதற்கிடையில் திருச்சி மாநகரில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர் ஒருவரை தனிப்படை போலீசார் நேற்று பிடித்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எத்தனை பேரிடம் சங்கிலி பறித்தார், அதனை எங்கு வைத்துள்ளார் என விசாரித்து வருகின்றனர். முழு விசாரணைக்கு பின் அவரை கைது செய்து, நகைகள் பறிமுதல் செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தற்போது திருச்சியில் அதிக அளவில் நடைபெறும் சங்கிலி பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
