திருச்சியில் காதல் திருமணம் செய்த என்ஜீனியர் தூக்கு மாட்டி தற்கொலை

திருச்சி சுப்பிரமணியபுரம் அருளானந்தர் கோவில்தெருவை சேர்ந்த ஜெனிபர்(29). என்ஜினீயர், கண்டோன்மெண்ட் ஸ்டேட் வங்கி அதிகாரிகள் காலனியை சேர்ந்த நவீன் இருவரும் காதலித்து கடந்த 2014-ல் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 3½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இருவரும் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தநிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட திருச்சிக்கு வந்தனர். அவரது மாமியார் வீட்டில் தங்கி இருந்தார்.

குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர். பின்னர் நவீன், உறவினர்களுக்கு இனிப்பு கொடுக்க பெற்றோருடன் சென்று விட்டார். வீட்டில் குழந்தையுடன் தனியாக இருந்த ஜெனிபர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிதுநேரம் கழித்து வெளியே சென்று இருந்த நவீன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடு திரும்பினர்.

வீட்டில் ஜெனிபர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் ஜெனிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜெனிபருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகின்ற நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்த விசாரணையில் அவர் அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என கண்டோன்மெண்ட் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
