குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்ட திருச்சி ராணுவ வீரன் !

குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்ட திருச்சி ராணுவ வீரன் !
திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள ராணுவ வீரர்கள் குடியிருப்பில் வசித்து வந்தவர் சதீஷ் (வயது 32). இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருச்சிக்கு வந்தார். பின்னர் மத்திய பஸ் நிலையம் அருகே 117 மத்திய பிரதேச ராணுவ படையில் பணியாற்றி வந்தார். சதீஷின் மனைவி ரம்யா (30). இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே நேற்று முன்தினம் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டில் சதீஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் விரைந்து சென்று சதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தற்கொலை செய்த சதீசின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர், 16.11.2019 அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்த சதீசின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் முசிறியாகும். சதீஷ் காஷ்மீரில் இருந்து திருச்சி வந்த பின், தனது மனைவியின் நகைகளை அடகு வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் அவர் தற்கொலை செய்து கொண்டார். வேறெதுவும் காரணம் இல்லை, என்று போலீசார் தெரிவித்தனர். தற்கொலை செய்த ராணுவ வீரர் சதீசுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையும் உள்ளன.
