திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணம் திருட்டு

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே பைத்தம்பாறை கிராமத்தில் வசித்து வருபவர் வீரையா (வயது 69). இவர் முசிறி தாலுகா அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி அமராவதி. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

வீரையாவின் மகளுக்கு வருகிற 15-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதனால் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக வீரையா வெளியூர் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் அமராவதி தனது மகளை அழைத்துக்கொண்டு திருமணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள், மற்றும் பணம் ரூ.50 ஆயிரம் திருட்டு போயிருந்தன.
இதுகுறித்து தா.பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்குப்பின் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு மர்ம ஆசாமிகள் விட்டுச்சென்ற தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீசார் நகை மற்றும் பணத்தை திருடிய ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
