திருச்சியில் 5-வது நாளாக டாக்டர்கள் வேலைநிறுத்தம்

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, மணப்பாறை அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி உள்ளிட்ட அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருந்தகம் என 500-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் பணிக்கு செல்லாமல் நேற்று 5-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் பணியிடங்களையும் உயர்த்த வேண்டும் அரசு டாக்டர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டினை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் கடந்த 25-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர்கள் அருளஸ்வரன், பாஸ்கர், தங்கவேலு, பிரபு உள்ளிட்டோர் காலை 11 மணிக்கு திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் திரண்டு, அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மருத்துவ பயிற்சி மாணவ-மாணவிகளும் நேற்று போராட்ட களத்தில் குதித்தனர். வருங்கால மருத்துவ மாணவர்களின் நலனுக்காகவே அரசிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே வேளையில் நேற்று அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகளுக்கு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகளுக்கு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் மட்டுமே சிகிச்சை அளித்தனர். நமது போராட்டத்தின் காரணத்தை புரிந்து கொண்டு அவர்களின் மனமும் மாறும். அரசு கொடுத்த வாக்குறுதிபடி கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வேறு முயற்சிகளில் ஈடுபட்டால், அவசர சிகிச்சை மற்றும் பிரேத பரிசோதனை செய்வதையும் புறக்கணிப்பு செய்து போராட்டத்தை வலுப்பெற செய்வோம். இதனால், அரசுக்கு ஒரு இக்கட்டான நிலையை உருவாக்குவோம் என்றனர்.
