குடியுரிமை வழங்குவதில் பாரபட்சம் கூடாது: திருச்சியில் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்

குடியுரிமை வழங்குவதில் அகதிகள் மத்தியில் எந்தவித பாரபட்சமும் காட்டக் கூடாது என தாயகம் திரும்பியோர் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த இயக்கத்தின் கலந்தாய்வு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, இயக்க மாநில அமைப்பாளரும், வழக்குரைஞருமான தமிழகன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் எஸ்.பி. செவந்தி வரவேற்றார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில கொள்கை பரப்புச்செயலர் பெரியார் சரவணன், சமூக ஆர்வலர் பி.வி. துரைசாமி, திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த டார்வின் தாசன், நதிகள் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் லதா மகேசுவரி, மக்கள் உரிமைக் கூட்டமைபின் ஒருங்கிணைப்பாளர் வாசுகி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் தமிழகன் கூறியது:

தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் 36 ஆண்டுகளுக்கு மேலாக லட்சக்கணக்கானோர் இருந்து வருகின்றனர். அனைவருக்கும் எந்தவித நிபந்தனையுமின்றி இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, அனைத்து அகதி முகாம்களுக்கும் அரசு அதிகாரிகளை அனுப்பி குடியிரிமை கோரும் விண்ணப்பங்களைப் பெற வேண்டும்.
முகாம்களுக்கு வெளியே குடியிருக்கும் அகதிகளுக்கும் உரிய முன்னுரிமை வழங்க வேண்டும். இதற்காக ஆட்சியரகங்களில் சிறப்புப் பிரிவு ஏற்படுத்த வேண்டும். ஆட்சியர் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை மத்திய அரசுக்கு விரைந்து அனுப்ப வேண்டும். அகதிகளுக்கான மறுவாழ்வுத் திட்டத்தை தொடங்கி குடியிருப்பு, தொழில், கடனுதவி, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். சிறப்பு நடவடிக்கையில் குடியுரிமை கோரி விண்ணப்பிக்காமல் விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்றார் அவர்.
