18 சட்டமன்ற இடைத்தேர்தல் : வெற்றி யாருக்கு?

நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலோடு தகுதி நீக்கம் செய்யப்பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், இறந்து போன மற்றும் தகுதியிழந்த என காலியாக உள்ள 22 சட்டமன்ற இடங்களில் 18 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகின்றது.
இதில் திமுக, அதிமுக, டிடிவி தினகரனின் அமமுக கட்சிகள் முழுமையாகப் போட்டியிடுகின்றன.
இதில் யாருக்கு வெற்றிக் கிட்டும் என்பதை இக்கட்டுரை கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் ஆராய்கின்றது.
தற்போதைய கருத்துக்கணிப்பில் அமமுக 10% – 15% வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையோடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுவதால் மக்கள் மத்தியில் இருக்கும் திமுகவிற்கு ஆதரவு நிலை சட்டமன்றத் தேர்தலிலும் இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. மக்களவையில் அமமுக தனித்துப் போட்டி என்பதும் மத்தியில் யாரை ஆதரிக்கிறது என்பதில் தெளிவில்லை என்பதும் பாஜக எதிர்ப்பு மட்டுமே அமமுகவிடம் உள்ளது என்பதால் மக்களவை கருத்துக்கணிப்பில் அமமுகவின் கை ஓங்கி இருக்கவில்லை. இதன் எதிரொலியாக சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுகவின் வெற்றி கடினமாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள அதிமுகவும், ஆட்சியைப் பிடிக்க திமுகவும் கடுமையான யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்களின் மனஉணர்வுகளால் அமமுக 3 இடத்திற்குத் தள்ளப்படும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் வாக்கு வங்கியை அமமுக சிதைக்க முடியுமே தவிர வெற்றி பெறும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த கணிப்பில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் அமமுக குறைந்தது 20000 வாக்குகளைப் பெறும். இது அதிமுகவின் வாக்குவங்கியிலிருந்து பெறப்படுவதாக இருக்கும். ஆர்.கே.நகர் தொகுதிபோல தற்போது திமுகவின் வாக்கு வங்கி சிதையும் வாய்ப்பு இல்லை என்றே கூறலாம்.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளைத் தற்போதையக் கூட்டணியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்சிகளின் வெற்றி வாய்ப்பை ஓரளவு கணித்து சொல்லமுடியும்.

ஆண்டிப்பட்டி தொகுதியைத்தவிர அனைத்து தொகுதியிலும் அதிமுக தோல்வியடைந்தாலும் ஆச்சரியம் இல்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கான வாய்ப்புகளை களத்தில் இருந்து பார்க்கவேண்டியுள்ளது. அதிமுக அரசின் மீது மக்கள் அதிருப்தியில் இருந்தாலும், அந்த இடத்தை அமமுக பாதியளவேனும் பூர்த்தி செய்யும் என்பதில் ஐயமில்லை. இந்தக் கணிப்பில் அதிமுகவின் மொத்த ஓட்டில் சுமார் 30,000 வாக்குகளை அமமுக பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் திமுக 12 இடங்களிலும் அதிமுக 6 இடங்களிலும் வெல்லும் வாய்ப்பு உள்ளது.
இதனால் அதிமுகவின் பலம் 115இலிருந்து 121ஆக உயரும். திமுகவின் பலம் 108ஆக உயரும். இதனால் ஆட்சி மாற்றம் நடக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இன்னும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
அதிலும் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தாலும், திமுகவின் எண்ணிக்கை 112ஆக உயர்ந்தாலும் ஆட்சி மாற்றம் நடைபெறும் வாய்ப்பு இருக்காது.
