சிபிஐ-க்கும், சிபிசிஐடி-க்கும் உள்ள வேறுபாடுகள்!

சிபிஐ-க்கும், சிபிசிஐடி-க்கும் உள்ள வேறுபாடுகள்!
இந்தியாவில் குற்றங்கள் பெருகி வரும் நிலையில் குறிப்பிட்ட வழக்குகள் சிபிசிஐடி-க்கும் சிபிஐ-க்கும் மாற்றப்படுகின்றன என்ற தகவல்களை அன்றாட வாழ்வில் தொலைக்காட்சியின் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் அறிகின்றோம்.
இந்த நிலையில் சிபிசிஐடி க்கும், சிபிஐ க்கும் உள்ள வித்தியாசம் என்பது பலரும் அறியாத ஒன்றாகும்.

அதற்கான வித்தியாசங்கள் குறித்த விவரங்கள் :

சிபிசிஐடி – மாநில புலனாய்வு அமைப்பு
சிபிஐ – மத்திய புலனாய்வு அமைப்பு
CB-CID – (Crime Branch – Crime Investigation Department):

சிபிசிஐடி, ஆங்கிலேயர்களால் கடந்த 1902ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது ஒரு மாநில புலனாய்வு அமைப்பாகும். குறிப்பிட்ட மாநிலங்களுக்கான வேலைகளை மட்டும் சிபிசிஐடி பார்ப்பதால், அதன் பணிக்கான இடம் சற்று குறைவு.
ஒரு மாநிலத்திற்குள் நடக்கும் கிரிமினல் வழக்குகள், கொலை வழக்குகள் போன்றவை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்படுகின்றன. மேலும், சிபிசிஐடி அதிகாரிகளின் பணி, குறிப்பிட்ட மாநிலங்களுக்குள் அடங்கிவிடும்.
அதேபோல், சிபிசிஐடி – யின் உதவியை மத்திய அரசு நாடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
CBI – (Central Bureau of Investigation) :
மிக முக்கியமான ஊழல், பொருளாதாரக் குற்றங்கள், முறைகேடுகள், பயங்கரவாதச் செயல்கள் போன்றவற்றை விசாரிக்கும் நாட்டின் முன்னணி விசாரணை நிறுவனம், ‘மத்தியப் புலனாய்வு அமைப்பு’ (சிபிஐ). இரண்டாவது உலகப் போர் சமயத்தில், போருக்குத் தேவையான கொள்முதல்களில் லஞ்சம், இதர முறைகேடுகள் நடந்ததால் அரசு ஊழியர்களை விசாரிக்கத் தனி அமைப்பாக ‘சிறப்பு போலீஸ் பிரிவு’ ஒன்று 1941-ல் ஏற்படுத்தப்பட்டது. அதுவே 1.4.1963-ல் உள்துறை அமைச்சகத் தீர்மானத்தால் ‘சிபிஐ’ என்ற புதிய பெயரால் அழைக்கப்பட்டது.
சிபிஐ, எனும் மத்திய புலனாய்வு பிரிவு இந்தியா முழுவதும் அதன் பணிகளை செய்யும். அதே சமயம், சிபிஐ-ன் பணிக்கான இடம் மிக அதிகம்.ஊழல் வழக்குகள், மோசடி வழக்குகள், பல மாநிலங்களில் நிகழும் மோசடி வழக்குகள் போன்றவை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுகின்றன.
மாநில அரசுகள் பெரும்பாலும் சிக்கலான வழக்குளில் சிபிஐயின் உதவியை நாடுகின்றன. மேலும், உச்ச நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றம் வழக்குகளை சிபிஐ விசாரிக்க உத்தரவு பிறப்பிக்க இயலும்.
