மறக்கமுடியுமா ஸ்ரீரங்கம் தீ விபத்து ….

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடந்த 2004 ம் ஆண்டு கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகன் உள்பட 62 பேர் பலியானதன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடந்த 2005 ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி குருராஜன், ஜெயஸ்ரீ ஆகியோரின் திருமணத்திற்கு ஏற்பாடு ஸ்ரீ பத்மப்ரியா திருமண மண்டபத்தில், திருமணம் நடக்க இருந்தது.
இதற்காக, மண்டபத்தின் மொட்டை மாடியில், 12 அடி உயர கீற்றுக் கொட்டகையில், மணப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. காலை, 8 மணியளவில், மணப்பந்தலில், நரசிம்மாச்சாரியார் ஹோமம் வளர்த்து, வேத மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருந்தார். திருச்சி, கடலூர், பெரம்பலூர், சென்னையை சேர்ந்த முதியவர்கள் உள்ளிட்டோர், ப்ளாஸ்டிக் சேர்களில் அமர்ந்து திருமண நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தனர்.
திருமணச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக, வீடியோகிராபரின் கையில் இருந்த, “ப்ளாஷ்லைட்’ திடீரென வெடித்து, பந்தலில் தீ பிடித்தது. உயிர் பிழைக்க ஓடியவர்கள், தப்பிச் செல்ல, குறுகிய மாடிப் படி ஒன்று மட்டுமே இருந்ததால், அனைவரும் கூட்ட நெரிசலில் சிக்கினர்.

எரிந்து கொண்டிருந்த கீற்றுக் கொட்டகை, அவர்கள் மீது விழுந்ததால் அதில் சிக்கி 62 பேர் பலியானார்கள்.அவர்களில் மணமகன் குருராஜனும் ஒருவர். 23 பெண்களும், 4 குழந்தைகளும் இந்த கோர தீவிபத்தில் சிக்கிக் கருகினர். 45 பேர்காயமடைந்தனர். மணமகள் ஜெயஸ்ரீ அதிர்ஷ்டவசமாக காயமின்றித் தப்பினார்.
தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த கோர சம்பவத்தைத் தொடர்ந்து இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிந்து, வீடியோகிராபர் தர்மராஜ், லைட்பாய் பாலாஜி, பந்தல் அமைப்பாளர் செல்வம், திருமண மண்டப உரிமையாளர் ராமசாமி, மண்டப மேலாளர் சடகோபன், எலெக்ட்ரிஷியன் முருகேசன் ஆகிய, ஆறு பேரை கைது செய்தனர்.
